
சென்னை:
கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தமிழகம்- இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் டிச.,17ம் தேதிவரை மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (டிச.,12) மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

