
கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன். இவரின் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புகழேந்தி வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் முருகநாதன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பத்து பேர் புத்தாண்டு கொண்டாட ஈஷா யோகா மையத்துக்கு டெம்போவில் சென்றனர். அப்பொழுது நரசீபுரம் சாலையில் உள்ள புதுக்காட்டு வாய்க்கால் அணைக்கட்டில் அனைவரும் குளித்து உள்ளனர்.
புகழேந்தி அணைக்கட்டில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது 12 அடி ஆழமுள்ள பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றும் முடியாததால் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் அணைக்கட்டில் மூழ்கிய சிறுவனை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

