
சென்னை : வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.வங்கக்கடலில் மத்திய மேற்கு பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த காற்றழுத்தம் மேற்கு – வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 38 செமீ மழை பதிவாகி உள்ளது. அப்பர் பவானியில் 10.5 செமீ. தேவாலாவில் 9.3செமீ, சேரங்கோட்டில் 9 செமீ, பந்தலூரில் 7 செமீ மழை பதிவாகி உள்ளது.




