Lok Sabha Elections 2024: எட்டாக் கனியான கரும்பு விவசாயி சின்னம்.. சீமான் கலக்கம்!

Advertisements

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது.இதனால் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பது எட்டாக் கனியாக அமைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த சில தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. இதனிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், அந்தச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி டெல்லி உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒரு சின்னத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்ய முடியாது. அக்கட்சிக்கு சின்னம் தேவைப்படும் பட்சத்தில் முன்னதாகவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி பதிவு செய்ததன் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுக் கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை, தமிழகம் என 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பது எட்டாக் கனியாக அமைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *