
லக்னோவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 மாணவ, மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோ அருகே புரானியா கிராமத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைப் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 15 மாணவ, மாணவிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், லக்னோவில் நடந்த பயங்கர தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தச் செய்தி நெஞ்சை உலுக்குவதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், லக்னோவில் நடந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் கூறினார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அதிகாரிகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.




