
இன்று மக்களாவை தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: ஒவ்வொரு ஐந்த ஆண்டும் 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும்.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகத் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வைத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்குத் தேவையான துணை ராணுவப் படைகள்குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தினர். இதனையடுத்து இன்று மக்களாவை தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


