
வாக்காளர்களுக்கு 300 ரூபாய் கொடுத்து உங்களிடம் வாக்கு வாங்கிவிடலாமெனச் சீப்பாக நினைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என இறுதி கட்ட பிரச்சாரத்தில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன் பரப்புரை.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணி உடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் இறுதி கட்ட பரப்புரையில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தினகரன் தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
இன்று இறுதி கட்ட பரப்புரையை பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் மேற்கொண்டபொழுது, தாங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்ததால் தான் தற்பொழுது தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மீண்டும் வந்துள்ளோம். 300 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கும் உங்கள் வாக்கை விலைக்கு வாங்கி விடலாமெனச் சீப்பாகத் தரம் குறைந்த எண்ணத்தில் உள்ள அரசியல் கட்சியினருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
தேனி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களைச் செய்து அனைத்து தரப்பு மக்களையும், வாழ்வாதாரத்தையும் பெருக்க தன் கணவர் திட்டம் வைத்துள்ளதாகக் கூறி இறுதி கட்ட பரப்புரை மேற்கொண்டார். பரப்பரைக்குப் பின்பு அப்பகுதியில் கூடியிருந்த பெண்களிடம் நேரில் சென்று பேசினார். அதன் பின்பு அங்கு இருந்த கோவிலில் வழிபட்டுத் தனது இறுதி கட்ட பரப்புரையை முடித்துச் சென்றார்.

