
யூடியூபர் இர்ஃபான் மீதான கருவின் பாலினம் கண்டறிந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள மருத்துவத்துறை, அவருக்கு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ள விவகாரம் குறித்த செய்தித் தொகுப்பு:
யூடியூபர் இர்ஃபான் வழக்கு: மருத்துவத்துறை மீண்டும் தீவிரம்!
பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது துபாய் சென்று அங்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தை அறிந்து கொண்டதுடன், அது தொடர்பான வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்தியாவில் சிசுவின் பாலினத்தை அறிவதும், அதனைப் பொதுவெளியில் வெளியிடுவதும் PCPNDT சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும்.
இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்களின் கண்டனங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளின் எதிரொலியாக, கிடப்பில் போடப்பட்டிருந்த இர்ஃபானின் கோப்புகளை மருத்துவத்துறை அதிகாரிகள் தற்போது மீண்டும் தூசி தட்டத் தொடங்கியுள்ளனர். சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட இந்த விவகாரத்தில், யூடியூபர் இர்ஃபானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடத்த மருத்துவத்துறை அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளனர்.


