
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலில், குறுகலான குகை போன்ற பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உடல் பருமன் காரணமாக இடுக்குப் பகுதியில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் பக்தர் ஒருவரும் இதேபோன்று சிக்கித் தவித்து மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளையும் புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது..
புதிய கட்டுப்பாடுகள்: கோயிலின் மிகக் குறுகலான குகை வாசல் வழியாகச் செல்ல உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை பலகையும் கோயில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் நியமனம்: பக்தர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


