
புதுடில்லி: நாளை (ஜூன் 4) தேர்தல் முடிவுக்குப் பின்னர் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் மாலை 4 மணிக்குப் பிரதமர் இல்லத்திலிருந்து பா.ஜ., அலுவலகம்வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ., கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வென்று, நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்பாரெனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக வந்துள்ளதால் பா.ஜ., தரப்பு குஷியாகியுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கையின்போது மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் கிட்டத்தட்ட தெரிந்துவிடும். முடிவுகளில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் நாளை மாலை 4 மணிக்குப் பிரதமர் இல்லத்திலிருந்து பா.ஜ., தலைமை அலுவலகம்வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி செல்லப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்தப் பேரணியில் பா.ஜ., வினர் பெருமளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


