
‘இந்தியாவின் சிலிக்கான் வேலி’ என்று அழைக்கப்படும் ‘நாட்டின் ஐடி தலைநக’ரான பெங்களூருவில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகள் பாஜகவின் கோட்டையாக கடந்த 20 ஆண்டுகள் நீடித்து வருகிறது.
பாஜகவின் இந்த கோட்டையை தகர்த்து மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸ் புதிய வியூகத்துடன் செயலில் இறங்கி உள்ளது.
பெங்களூருவில் வடக்கு தெற்கு மற்றும் மத்திய என மூன்று தொகுதிகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக திகழ்ந்துவரும் இந்த தொகுஉதிகளில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக பெங்களூரு தெற்கு தொகுதியில் 1991 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாஜக வெற்றிக் கனியை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் மத்திய தொகுதி 2008 ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்பால் உருவானது அப்போது தொடங்கி பாஜகவை சேர்ந்த பி சி மோகன் என்பவர் தொடர்ந்து மூன்று முறை எம்பி யாக வெற்றி பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த தொகுதிகளை கைப்பற்றும் காங்கிரஸ் முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மூன்று தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி புது முகங்களை களம் இறக்கி உள்ளது பெங்களூருவின் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தேஜாஸ்ரீ சூர்யாவை எதிர்த்து சௌமியா ரெட்டி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் காங்கிரசின் பழம் பெரும் தலைவர்களில் ஒருவரான ஆர் ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார்.
பெங்களூரு மத்திய தொகுதி வேட்பாளராக மன்சூர் அலிகானை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. இவரும் காங்கிரஸின் முன்னோடி தலைவர்களின் ஒருவரான ரஹ்மான் கானின் மகன் ஆவார். பெங்களூர் வடக்கு தொகுதியில் தற்போதைய எம்பி யாக இருப்பவர் சதானந்த கவுடா.
இந்த முறை இவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டு, சிக் மங்களூர் தொகுதியைச் சேர்ந்த மத்திய ராஜாங்க அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே களம் இறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு எதிராக செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான ராஜீவ் கவுடா காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார்.
வழக்கமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூரு நகர்புற மாவட்டங்களில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸின் கை ஓங்கி இருக்கும்.
ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அந்த 28 தொகுதிகளில் 16 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருப்பது பாஜகவின் துணிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பெங்களூருவை தங்களது கோட்டையாக தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில்பெங்களூரு நகரத்தில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத குடி தண்ணீர் பஞ்சம் காங்கிரஸின் வெற்றிப் பயண முயற்சிக்கு முட்டுக்கட்டை போடலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால், அரசியல் திறனாய்வாளர் விஷ்வாஷ் ஷெட்டி, “காங்கிரஸ் கட்சியின் ஐந்து உத்தரவாதங்கள் நகர்ப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸின் புதிய வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



