
ஒரு காலத்தில் அசாம் தேயிலை உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்ததாகவும், இப்போது செமி கண்டக்டர் சிப்களின் உற்பத்திக்காகவும் அசாம் பெயர் பெற உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமாஜியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, அசாமில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை என்றும், சிப் உற்பத்தி நவீனத் தொழில்நுட்பத்தின் மையமாக அசாமை மாற்றும் என்றும் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் செல்பேசிகள், கார்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்ப்பதனப் பெட்டிகள் அனைத்தும் அசாமில் தயாரிக்கப்பட்ட சிப்களைக் கொண்டு இயங்கும் என்றும், இதுதான் அசாமின் வளர்ச்சிக்கான தங்கள் திட்டம் என்றும் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அசாமில் இருந்து குண்டுகள், துப்பாக்கிகள், வன்முறைகள், ஊரடங்கு உத்தரவுகள் என்று தான் செய்திகள் வந்ததாகவும், பாஜக ஆட்சி நல்லாட்சிக்கு இலக்கணமாகத் திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். அசாமின் பண்பாட்டைக் காக்கும் வகையில் பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.



