Lok Sabha Election 2024: 2-ம் கட்ட தேர்தல் விறுவிறு.. கேரளாவில் காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவிகித வாக்குகள் பதிவு!

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.

கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 14 தொகுதிகளில் மொத்தம் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 26 பேர் பெண்கள் ஆவர்.

மத்திய பிரதேசத்தின் 7 தொகுதிகளில் 80-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்குப் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் முதற்கட்ட தேர்தலில் 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 13 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொகுதிகளில் 152 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 2 மத்திய மந்திரிகள், பா.ஜனதா மாநில தலைவர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்குள்ள ஜலோர் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் களத்தில் உள்ளார். இதைப் போலப் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் போட்டியிடும் ஜலாவர்-பரான் தொகுதியும் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

கேரளாவில் காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது- தேர்தல் ஆணையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *