
அமராவதி: ‘ஆந்திராவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகன் மிகப் பெரிய அளவில் தோற்ப்பார்’ எனப் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (மே 13) நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா அரசியல் கள நிலவரம்குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 67 தொகுதிகளில் வெற்றி பெறும். தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெகன் மோகன் பெரிய அளவில் தோற்ப்பார்.
லோக்சபா தேர்தல் எப்படி?
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 15 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான தவறுகளைச் செய்துள்ளார். முதலில் அவர் தனது தாய் மற்றும் சகோதரியைத் தனக்கு சாதகமாக வைத்திருக்கத் தவறி விட்டார்.
ராஜாபோல ஜெகனுக்கு நினைப்பு
கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டிக்காகக் கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது. ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜாபோல நினைக்கிறார். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்போல அவர் நடந்து கொள்ளவில்லை.
துரோகம்
அவர் தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்குத் துரோகம் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ஆளும் கட்சி சட்டசபை மற்றும் லோக்சபா ஆகிய இரண்டு தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கும் எனப் பிரசாந்த் கிஷோர் கூறியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



