
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் காலை 9 மணிக்குத் தான் தொடங்க வேண்டும் எனத் தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது.
வரும் 19ம் தேதி லியோ தொடங்க உள்ள நிலையில், சிறப்புக் காட்சிகள், படத்தின் ரிலீஸ், டிக்கெட் விலையென ஒவ்வொன்றாகச் சர்ச்சையாகியுள்ளது. லியோ படத்திற்கு சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பக் கேட்டுப் படக்குழு கோரிக்கை விடுத்த நிலையில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளைத் திரையிடத் தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 4மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிகள்குறித்து, தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 1.30 வரை ஒவ்வொரு காட்சிகளும் திரையிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை காட்சி இல்லையெனக் கூறப்பட்டுள்ளது. அதிகாலை காட்சிகாகக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல் லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரூ.5000 வரை டிக்கெட் விலை இருப்பதாகச் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்களைப் பார்க் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், திரையரங்குகளில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி, திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்கானிக்க சிறப்பு குழு அமைத்து அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.




