நேருவின் பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி!

Advertisements

புதுடெல்லி: 

சுதந்திர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் எதிர்காலத்தைக் கற்பனை செய்து, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்திற்கான தனது இடைவிடாத முயற்சியின் மூலம் அதனை வடிவமைத்தார். நவீன மற்றும் தன்னம்பிக்கை மிக்க இந்தியாவிற்கு அவர் அடித்தளம் அமைத்தார். புதிய உச்சங்களை அடைய நாட்டு மக்களுக்கு அவர் சிறகுகளை வழங்கினார்.

இன்று, அவருடைய ஒப்பற்ற மற்றும் முன்மாதிரியான மரபை நாங்கள் மதிக்கிறோம்!

சுதந்திர இந்தியாவின் நிகழ்காலத்தை அழகுபடுத்தும் அதே வேளையில், அதன் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்த ஒரு சிந்தனை நேருவினுடையது.

கடினமான சூழ்நிலைகளில் தனது திறமையான தலைமைத்துவத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நாட்டின் நிலையையும் திசையையும் மாற்றியவர் அவர். நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி.

தோட்டத்தின் மொட்டுகள்போல, குழந்தைகள் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள். நம் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடமே உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, சுதந்திரம் மற்றும் செழிப்புக்கான உரிமை உள்ளது என்பது நேருவின் கனவு. நாட்டின் குழந்தைகளை ஊக்குவிப்போம், அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகளைக் கொடுப்போம். குழந்தைகள் தின வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “நவீன இந்தியாவின் தந்தை, நிறுவனங்களை உருவாக்கியவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி.

ஜனநாயக, முற்போக்கான, அச்சமற்ற, தொலைநோக்கு கொண்ட, அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான நேருவின் மதிப்புகள் நமது இலட்சியமாகவும் இந்தியாவின் அடிப்படையாகவும் இருக்கின்றன. அவை எப்போதும் அப்படியே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமூக, அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் தனது தொலைநோக்கு பார்வையுடனும் திறமையான தலைமைத்துவத்துடனும் இந்தியாவை முன்னெடுத்துச் சென்ற நேருவுக்கு வணக்கம் என அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவை பூஜ்ஜியத்திலிருந்து உச்சத்திற்கு கொண்டு சென்றவர். நவீன இந்தியாவின் சிற்பி. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்தவர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை நாட்டிற்கு தொடர்ந்து வழங்கியவர். ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலரும், நமது உத்வேகத்தின் ஆதாரமுமான நேருவின் 135வது பிறந்தநாளில், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். “இந்திய வாழ்க்கையின் பன்முகத்தன்மைகள் மற்றும் பிரிவுகள், வகுப்புகள், சாதிகள், மதங்கள், இனங்கள், கலாச்சார வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் பற்றியும் நான் முழுமையாக அறிந்திருந்தேன். ஆயினும்கூட, ஒரு நீண்ட கலாச்சார பின்னணி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சீரான கண்ணோட்டம் கொண்ட ஒரு நாடு, அதன் சொந்த மற்றும் அதன் அனைத்து குழந்தைகளிலும் ஒரு உத்வேகத்தை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் இந்த ஆன்மாவை நான் தேடியது வெறும் ஆர்வத்தினால் அல்ல. அது எனது நாட்டையும் அதன் மக்களையும், எண்ணங்களையும், செயல்களையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலைக் கொடுக்கும் என்று நான் உணர்ந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் 1889-ல் பிறந்த நேரு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மே 27, 1964 இல் அவர் உயிர்நீத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *