
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நேரத்தில் சென்னையிலிருந்து நெல்லைக்கு சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கனவே பாஜக நிர்வாகிகளான கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வரிசையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக முதன் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிசிஐடி அழைப்பாணையை ஏற்று நயினார் நாகேந்திரன் இன்று முதல் முறையாக அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். இதனால் சிபிசிஐடி அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது.



