
ஒரு வருடத்திற்கு மேலாகியும் தந்தையின் ஓய்வூதியம் கிடைக்காததால் மகனும் தாயும் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கூறியதால் கோவில்பட்டி நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கூறி மக்கள் உரிமை இயக்கம் தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாநில தலைவர் சுடலைமணி தலைமை வகித்தார். அப்போது, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சரவணன் என்பவர் தந்தை இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் இதுவரை அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை,என்றும் தெரிவித்தார். இதன் பின்னர், அவர் அங்கிருந்த சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு காலில் விழுந்தார்.
அது மட்டுமின்றி தாணும் தன் தாயும் தீக்குளித்து தன் உயிரை மாய்த்து கொள்ளப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஓய்வூதியம் விரைவில் வழங்கப்படும் என்று சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு தெரிவித்தார். இதற்கிடையில், ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்றுத்தர போராட்டத்திற்கு கூப்பிட்டு வந்த சுடலைமணி 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக சரவணன் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



