
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் உப்பங்கழியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையில் கோவளம் உப்பங்கழியில் நீர்த்தேக்கத்தை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அனுமதி கிடைத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இதன் சூழலியல், மீனவர் வாழ்வாதாரச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டிச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரையிலான 16 ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திக் கோவளம் உப்பங்கழியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


