
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தன் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் தன்னால் பதில் கூற முடியும் எனவும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என இல்லாதது பொல்லாததை வாய்க்கு வந்ததை பேசுவது நாகரீகம் அற்றது என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை நடந்த ஊழல்கள் முழுமையாக தெரிந்த பின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் தனக்கு அனுபவம் குறைவுதான் கோவில் பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில் எனக்கு அனுபவம் குறைவு, அவற்றை கற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை ,திமுக ஆட்சியில் ஒரு பணியை எடுத்து செய்வதற்குள் ஏன் எடுத்தோம் என நினைக்கும் அளவுக்கு பிரச்சனைகள் இருந்தது என கடுமையாக விமர்சித்து இருந்தார்,’
இந்த நிலையில் அமைச்சர் ரமேஷின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” திமுக ஆட்சிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை போது 10 கலை கல்லூரிகள் அந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என கூறி 4 கல்லூரிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
அந்த 4 கலை கல்லூரிகளில் 2 கல்லூரிகளுக்கு தடை ஆணை கேட்டு உயர்நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் முறையாக அரசு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்து நான்கு கல்லூரிகளுக்கும் தடை இல்லை எனவும், நீதிமன்றம் உத்தரவு பெற்று கல்லூரி பணிகளை மேற்கொள்ளலாம் என கூறினர். அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றனர். அப்போதும் அந்த உத்தரவு மீது எந்த தடையும் இல்லை என கூறி விட்டனர்.
கல்லூரிகள் கட்டப்படுவது அறநிலைய துறையின் சட்டத்தின் படி ஏற்புடையது என்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிகள் கட்டப்படலாம் என்று நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நான்கு கல்லூரிகளில் இரண்டு கல்லூரிகளில் கட்டப்பட்டு விட்டது.
அந்த இரண்டு கல்லூரிகளிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் வாடகை இடத்தில் தான் அந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதனை சொந்த இடத்தில் கட்ட அரசு முன்வர வேண்டும். 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகள் 50 ஆண்டுகளுக்கு செய்து இருக்க வேண்டிய பணிகள். என் மீது தக்க ஆதரங்கள் உடன் தற்போது உள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டபூர்வமாக புகார் கூறினால் தான் நான் அதற்கு பதில் கூற முடியும்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என இல்லாதது பொல்லாததை வாய்க்கு வந்ததை பேசுவது நாகரீகம் அற்றது. நாங்கள் 2021 இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை போது அறிவித்த 10 கலை கல்லூரிகளில் 4 கல்லூரிகள் கட்டப்பட்டது. மீதம் உள்ள 6 கலை கல்லூரிகளை தவெக அரசு கட்ட வேண்டும்” என தெரிவித்தார்.




