
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதக் கிட்னி கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் விசைத்தறித் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களைச் சில கும்பல்கள் பறித்துச் செல்வதாகவும், அதைத் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏழைத் தொழிலாளர்களைச் சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் தருவதாகக் கூறி விலை பேசி அவற்றை ஆந்திர, கர்நாடக, தெலங்கானம், மராட்டிய மாநிலங்களில் பணக்காரர்களிடம் 50 இலட்ச ரூபாய்க்கு விற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இலட்ச ரூபாய்க்காகச் சிறுநீரகத்தையே விற்க மக்கள் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்றும், இதையறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கதையளந்து கொண்டிருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சிறுநீரகத் திருட்டுக் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.




