
பாலக்காடு: நாட்டில் மிகவும் வறுமை குறைந்த மாநிலம் கேரளா என ‘நிடி ஆயோக்’ நிறுவனம் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட வறுமை குறியீட்டில் நாட்டில் மிகவும் வறுமை குறைந்த மாநிலம் கேரளா என்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பது: 2016ம் ஆண்டு 0.7 சதவீதமாக இருந்த கேரளாவின் வறுமை நிலை 2021ல் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் 33.76 சதவீதம், ஜார்கண்ட் 28.81 சதவீதம் மேகாலயா 27.79 சதவீதம் உத்தரப்பிரதேசம் 22.93 சதவீதம் மத்தியப்பிரதேசம் 20.63 சதவீதம் என வறுமை நிலை உள்ளது.
மத்திய அரசின் அளவுகோல் அடிப்படையில் நாட்டின் வறுமை இல்லாத மாவட்டமாக கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரம் கல்வி வாழ்க்கை தரம் ஆகிய பிரிவுகளில் உள்ள 12 குறியீட்டை மையமாக கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் முகநுால் பதிவில் கூறியிருப்பது: ‘நிடி ஆயோக்’ நிறுவனம் வெளியிட்ட வறுமை குறியீட்டில் வறுமை மிகக் குறைந்த மாநிலம் கேரளா என, மீண்டும் கண்டறிந்தத்தில் பெருமை கொள்கிறேன். மீதி உள்ள வறுமை நிலையையும் நீக்கும் முயற்சிகளோடு அரசு முன்னோக்கி செல்கிறது.கேரளாவை வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவது என்பது 2021ல் ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது எடுத்த முடிவு. உணவு வீடு சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகியவை உறுதி செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். 2025 நவ., 1ம் தேதி ‘வறுமை இல்லா கேரளம்’ என்ற இலக்தை எட்ட முடியும் என்பது எதிர்பார்ப்பு. ‘நிடி ஆயோக்’ குறியீடு இந்த நோக்க பயணத்தில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

