
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்து ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி ஆற்றைக் கடந்து செல்லப் பாலம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.44 இலட்சம் மதிப்பில் புதிதாகப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பாலம் கட்டும் ஒப்பந்த பணியை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த திருப்பதி (47) என்பவர் மேற்கொண்டு வருகிறார். ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் அய்யம்பாளையத்தை சேர்ந்த, அய்யனவேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
பாலம் கட்டக் கூடாது என்று கூறி ஒப்பந்ததாரர் திருப்பதிக்கு அய்யனவேல் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் திருப்பதி புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து ஒன்றிய பாஜக தலைவர் அய்யனவேலை கைது செய்தனர்.

