
சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு நன்மை மற்றும் தீமை பயக்கும் செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது . அந்த வகையில் மனிதன் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் , ஒரு செயற்கை தொழில்நுட்பம் செய்து விடுகிறது . இதனால் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் மனித செயல்பாடுகளை விட ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் தான் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் ,நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் தனது புகைப்படத்தை வேறு உடையில் உருவாக்கி வெளியிட்டதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகவும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டினார். கடந்த காலத்தை ஒப்பிடும் போது, சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் பேசுகையில், “கொரோனாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்கள் குறைந்துவிட்டன.
ஏஐ மூலமாக நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நம் முன்னேற்றதுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆனால், ஏஐ தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. என்னுடைய ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கே நான் தானா அது? என்ற கேள்வி எழுந்தது. அந்த அளவுக்கு அது ஒரிஜினலாக இருந்தது.
ஏஐ அச்சுறுத்தலாக உள்ளது.தொழில்நுட்பம் வளர வளர, சில விஷயங்கள் மாறுவதே இல்லை. இப்படியான விஷயங்கள் காயப்படுத்துகின்றன. நானும் என் கணவரும் இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்தேன். ஒரிஜினலாகவே இருந்தது. எதை நம்புவது? எதை நம்ப கூடாது என தெரியவில்லை” என்றார்.


