
தவெக தலைவர் விஜய் 7 மணி நேர காலதாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டபேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியபோது, கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதை உலுக்கியது என்றும் உறவுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
தவெக தரப்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய நிலையில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன எனவும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் 7 மணி நேர காலதாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனக் குற்றம் சாட்டினார். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை என்றும் கூறினார்.
உடற்கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.


