
கரூர் கூட்ட நெரிசல் பற்றிப் பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கரூர்த் துயரம் பற்றிய உண்மையைக் கண்டறிவதற்காகப் பாஜக தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் கரூருக்குச் சென்று துயரம் நேர்ந்த இடத்தைப் பார்வையிட்டனர். அதன்பின் மருத்துவமனைக்குச் சென்று அங்குச் சிகிச்சை பெற்று வந்தோரைப் பார்த்து ஆறுதல் கூறினர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், நெரிசல் ஏற்பட்ட இடத்தின் அருகில் மூன்று தனியார் மருத்துவமனைகள் இருக்கும்போது காயமடைந்தவர்களை அங்குக் கொண்டுசெல்லாமல் தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது ஏன்? என வினவினார்.
திமுக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்றும், அதேநேரத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தவெகவினர் மீதும் குற்றம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூட்ட நெரிசல் பற்றிப் பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.



