
கரூர், சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடும்பங்களுக்கு, தீபாவளி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
தமிழக வரலாற்றில் திமுக தலைமை இந்துக்களின் பண்டிகைகளுக்கு எப்போதும் வாழ்த்து தெரிவிப்பது இல்லை.அதே சமயம் திமுகவில் அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, கரூரில் வருடம் தோறும் பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு சில்வர் பாத்திரம், ஸ்வீட், காரம் வழங்கும் நிகழ்ச்சியை, இன்று அவருக்கு ராசியான கோடங்கிபட்டி பகுதியில் உள்ள, பட்டாளத்து அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்த பிறகு பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், கோடங்கிபட்டி பகுதிக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாத காலம் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி கரூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும், பொது மக்களுக்கு வீடுகள் தோறும் சில்வர் பாத்திரம் ஸ்வீட் காரம் வழங்கி தனது தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



