
எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றி ஏழாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில், திமுக வளர்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் எம் ஜி ஆர் தான். திமுக உங்க அப்பன் வீட்டு சொத்தா? உதயநிதி ஸ்டாலின் வாரிசோட வாரிசு. அனைத்து மதங்களும் ஒன்று என்று நினைக்கக் கூடிய இயக்கம் அதிமுக, மத நல்லிணக்கத்தை போற்றக்கூடிய கட்சி அதிமுக தான். முதல்வர் முக ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத நிலை இருக்கிறது. 2024 தாண்டுமா என்பது இயற்கை தான்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்காக தவழ்ந்தும் ஒடியும் உழைத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி போல் எடுத்த எடுப்பிலே அமைச்சர் ஆகிவிடவில்லை. உதயநிதி அமைச்சராகும் முன்பு அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறினார். ஆனால் அமைச்சர் ஆக்கபட்டார் தற்போது துணை முதல்வர் பதவி குறித்து வதந்தி பரப்புவதாக முதல்வர் கூறுகிறார். இன்னும் ஆறு மாதத்தில் இந்த ஆட்சி நிக்காது. பொங்கல் பரிசு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ. 2500 வழங்கப்பட்ட போது ரூ. 5000 கொடுங்கள் என்று கூறினார் ஸ்டாலின். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கி உள்ளார்கள் நாங்கள் வழங்கின ரூ. 2500 கூட வழங்கவில்லை.
சத்துணவில் அழுகிய முட்டை வழங்குவதாக புகார் குறித்து கேட்டதற்கு அது முட்டையின் மேல் இருந்த சாயம் என்று பதில் கூறினார் விஞ்ஞானி அமைச்சர் கீதா ஜீவன். எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீருடன் நிக்காது என்று கூறினார் அமைச்சர் கீதா ஜீவன். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை நீர் தூத்துக்குடி பகுதியில் இன்றும் வடியாத நிலையில்தான் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைந்த சபதம் எடுக்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன் படித்து அமைச்சராவதற்கு எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் காரணம். அதே போன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் காரணம் என்றார்.


