காரைக்கால் ஜெயப்பிரகாஷ் கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாகச் சம்பளம் வழங்காததால் நகராட்சி ஆணையரும் நூற்பாலை மேலாண் இயக்குனருமான சுபாசைச் சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மேலஓடுதுறையில் உள்ள ஜெயப்பிரகாஷ் கூட்டுறவு நூற்பாலையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த மூன்று மாதமாகச் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் நூற்பாலை மேலாண் இயக்குநர் பொறுப்பில் உள்ள நகராட்சி ஆணையர் சுபாசிடம் இது குறித்துப் புகார் அளித்தனர். அப்பொழுது ஆணையர் சுபாஷ் தொழிலாளர்களை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அவரை அறையை விட்டு வெளியே விடாமல் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொழிலாளர்களை ஒருமையில் பேசியதற்காக ஆணையர் சுபாஷ் வருத்தம் தெரிவித்ததுடன், விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தொழிலாளர்களை ஒருமையில் பேசியதற்காக ஆணையர் சுபாஷ் வருத்தம் தெரிவித்ததுடன், விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.




