ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா..!

திமுக மாவட்டப் பிரதிநிதி தனது உறவினர்களின் ஐந்துக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்ற முயல்வதாகக் கூறித் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தாங்கோட்டை பேரூராட்சி எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த பைரவா கவுண்டர் இதே பகுதியில் சுமார் கால் ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்களும் ஐந்து மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் திமுக மாவட்டப் பிரதிநிதி ராஜகோபால் தங்களைத் தங்கள் நிலத்துக்குள் விடாமல் தடுத்து வருவதாகக் கூறிக் காவல் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பைரவா கவுண்டர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்கள் தோட்டத்தில் உள்ள தேங்காயைப் பறிக்கச் சென்றாலும் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், எங்குச் சென்றாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறித் திமுக மாவட்ட பிரதிநிதி மிரட்டுவதாகப் பைரவா கவுண்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பைரவா கவுண்டரும் அவர் மனைவியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் நிலத்தைத் திமுக மாவட்டப் பிரதிநிதி ராஜகோபாலிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *