
சீனாவில் மருத்துவம் பயின்று வந்த கன்னியாகுமரி மாணவி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புல்லந்தரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்து இவருக்கு ரோகிணி என்ற மகள் இருக்கிறார். 27 வயதாகும் ரோகிணி சீனாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். அவரின் படிப்பு முடிந்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வந்துள்ளார். ரோகிணியின் வருகைக்காக அவரின் பெற்றோர் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வந்துள்ளது.
ரோகிணி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சக மாணவிகள் ரோகிணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்காக சென்ற மகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு பெற்றோர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே தங்கள் மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோகிணியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். எனினும் 4 நாட்களாகியும் மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவில் மருத்துவம் படிக்க ரூ.50 லட்சம் என்று பேரம் பேசி ரோகிணியின் தந்தை அவரை சீனாவுக்கு படிக்க அனுப்பி உள்ளார். இதுதவிர அவ்வப்போது கடன் வாங்கி மகளுக்கு செலவுக்கான பணத்தையும் அனுப்பி உள்ளார். இதனால் கோபால கிருஷ்ணன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நிலையில், தற்போது ரூ.21 லட்சம் அனுப்பினால் மட்டுமே உடலை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியும் என்று சீனாவில் இருந்து கூறியுள்ளார்களாம்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபால கிருஷ்ணன் தவித்து வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு மாணவியின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

