
கோவையில் இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.6 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் விஜயன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை 100 அடி வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் 4.6 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டது. இது சுமார் 575 சவரன் நகை ஆகும். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் பொள்ளாச்சி ஆனைமலை அருகே வசித்து வரும் விஜய் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தியதுடன் விஜய்யின் மனைவி நர்மதா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ தங்க நகைகள் மீட்டு இருந்தனர்.
இந்நிலையில் தனிப்படையினர் நர்மதாவின் வீட்டை சோதனையிட்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனிடையே தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து யோகராணி என்பவரை தனிப்படை போலீசாரால் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை தர்மபுரி அகதிகள் முகாமில் குப்பைத் தொட்டிகளுக்குள் யோகராணி மறைத்து வைத்திருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டது. மேலும் வைர நகைகள் சிலவற்றை சாலையோரத்தில் ஒரு அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்து வைத்து இருந்ததையும் தனிப்படை போலீசார் மீட்டனர்.
மேலும் கடந்த மாதம் கொள்ளையன் விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 கிலோ நகையை மீட்டு இருந்தனர். தற்போது விஜய்யின் மாமியாரிடம் இருந்து சுமார் 1 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட 4.6 கிலோ தங்க நகைகளில் 95 சதவீதம் மீட்கப்பட்ட நிலையில், சிறிதளவு நகைகளுடன் தலைமறைவான கொள்ளையன் விஜய்யை 5 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாலை அணிந்து பக்தர் போல் வேடமணிந்து சுற்றிய விஜயனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்ட நிலையில், 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி கொள்ளையன் விஜயனை போலீசார் கைது செய்தனர்.



