
கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் விமான நிலையம் பின்புறம்,ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவருடன் இருந்த வாலிபரும் அரிவாளால் வெட்டப்பட்டார்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்க முயன்ற போது,3 குற்றவாளிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தலைமை காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.இதனால் தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில்,3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


