JIPMER Hospital: ஒன்றரை வயது குழந்தை பலி.. உறவினர்கள் போராட்டம்!

Advertisements

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டிலட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழந்த நிலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.

புதுச்சேரி நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது ஒரு வயது பெண் குழந்தை சாசிக்காவை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு ஆகஸட் மாதம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்பொழுது ஸ்கேன் செய்வதற்கு முன்பாகக் குழந்தையின் உடலில் செலுத்தும் மருந்தை அதிக டோஸ் உள்ள மருந்தை மருத்துவர் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. பின்னர் கடந்த 7 மாதமாகக் குழந்தையை மருத்துவர்கள் வெண்ட்டிலேட்டரில் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பெற்றோர் கேட்கும்போது குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவே மருத்துவர்கள் கூறி வந்துள்ளனர். மேற்கொண்டு ஏதாவது கேட்கும் பட்சத்தில், பதில் கூறாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை தந்த நிலையில் இக்குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து இந்திய ஜனநாயக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாதுரை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் ஸ்ரீதர், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன் தவறான மருந்து கொடுத்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை வெண்டிலேட்டர் வைத்துத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் குழந்தையின் நிலைமைகுறித்து கேட்டால் சரியான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர். தொடர்ந்து மருத்துவரைக் கேள்வி கேட்டதால் குழந்தையின் உறவினர்மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து குழந்தை பல மாதங்களாக வெண்டிலேட்டரில் வைத்துச் சிகிச்சை அளித்து வந்தனர். பல போராட்டங்கள் நடத்தினோம். தற்போது குழந்தை உயிரிழந்துள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த டி நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *