
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜெ.டபிள்யு. மேரியாட் ஹோட்டலில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் ஐந்தாவது அமெரிக்க தூதரகமாகும்.
நிரந்தர கட்டடம் கட்டும் வரையில் தற்காலிகமாகத் தூதரகம் இங்கு இயங்கும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி துணை தூதரகத்தைத் திறந்துவைத்தனர்.
அப்போது கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவகுமார், தொழில்துறை மந்திரி எம்.பி.பாட்டீல், பெங்களூரு தெற்கு பா.ஜக. எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசியவது,
பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும்.
நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்றப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகர மக்களுக்கு இது மிகவும் அனுகூலமாக இருக்கும்.
ஏற்கனவே, 12 நாடுகளின் துணை தூதரகங்கள் பெங்களூரில் உள்ளன. பல நாடுகளின் துாதரகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது.
இந்தியா-அமெரிக்கா உறவைப் பலப்படுத்த முயற்சி நடக்கிறது. பெங்களூருவில் ஏராளமான வளங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.



