
டெல் அலிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் லெபனான் நாட்டின் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்தக் கட்டத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வாரை டார்கெட் செய்து இஸ்ரேல் தீர்த்துக் கட்டி உள்ளது. நேற்று முன்தினம் அவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் இருக்கும் கட்டடத்தைக் கண்டுபிடித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யஹ்யா சின்வாரை கொன்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக் கட்ட ஹமாஸ், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கிப் பறந்து வந்த ட்ரோன் வெடித்து சிதறியுள்ளது. நெதன்யாகுவுக்கு இஸ்ரேலின் தெற்கு ஹைஃபா பகுதியில் சிசேரியா என்ற இடத்தில் தனி சொகுசு பங்களா உள்ளது.
இந்தப் பங்களாவை நோக்கி லெபனானிலிருந்து ட்ரோன் பறந்து வந்துள்ளது. இந்த ட்ரோன் அவரது பங்களாவின் அருகே வெடித்து சிதறியுள்ளது. இதில் பங்களாவின் ஒரு பகுதி முழுவதுமாகச் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதியில் வெளியாகும் ஏஐ- ஹதாயத் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛ட்ரோன் அட்டாக்கில் நெதன்யாகுவின் வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. ஆனாலும் அதனை இஸ்ரேல் அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இந்தத் தாக்குதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேபோல் ட்ரோன் தாக்குதல் சமயத்தில் நெதன்யாகு வீட்டில் இருந்தாரா? இல்லையா? என்பது சரியாகத் தெரியவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்போது இஸ்ரேலை அதிர வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தைகாட்டி உள்ளது. நெதன்யாகுவிற்கு எதிராக ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஒன்றிணைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவரை டார்க்கெட் செய்து தாக்குதல் நடத்தலாம் என்பதால் நெதன்யாகுவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



