
ஹர்மூஸ் ஜலசந்தியை இன்னும் 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் கடுமையான அழிவைச் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியிலிருந்து கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து இதற்கு பதில் தாக்குதலாக ஈரான், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில் நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. இதனால், கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹர்மூஸ் ஜலசந்தியை திறக்கவேண்டும் அல்லது ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என ஈரானுக்கு தான் 10 நாட்கள் கெடு விதித்திருந்ததாகத் தெரிவித்தார்.
ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் ஹர்மூஸ் ஜலசந்தியை இன்னும் 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் கடுமையான அழிவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்..



