
வாஷிங்டன்:இஸ்ரேல் நாட்டின்மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றித் தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அதிபர் பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளசெய்தியில், இன்று காலை இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன் எனப் பதிவிட்டுள்ளார்.



