மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
காசா:காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல். இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 440 பேரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. நேற்று லெபனான் மீது மீண்டும் வான் தாக்குதல் நடத்தியது.
அதன்பின்னர் இன்று அதிகாலையில் காசாவில் வான் தாக்குதல் நடத்தியது. மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியைக் குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் பலத்த காயமடைந்ததாகவும் பாலஸ்தீன மருத்துவத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகில், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மசூதி தாக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், மசூதிமீதான தாக்குதல்குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.
