
ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி மு க விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லையென நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜகவை வீழ்த்தப் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது.
மேலும் தேர்தலில் பிரிந்து சென்று வாக்குகளைச் சிதறவிடாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனைப் பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாகப் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் அவர்கள்.
ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது தி மு க. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் தி மு க, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது என்?
தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா தி மு க ? கூட்டணிக்காகத் தமிழ் மொழியை அடகு வைக்கத் துணிந்து விட்டதா தி மு க? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்யத் தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும்.
ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி மு க விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லையென நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


