Julian Assange:இங்கிலாந்து சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே விடுதலை!

Advertisements

இங்கிலாந்து சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

லண்டன்:விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியது.

இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கி லீக்சில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் ஆஜராகவும் ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

இங்கிலாந்து சிறையில் இருந்த அசாஞ்சே, அமெரிக்காவின் நீதித்துறையின் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஒப்பந்தப்படி, அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை அசாஞ்சே ஒப்புக்கொண்டு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இந்தக் குற்றத்திற்கு 62 மாதங்கள் (1,860 நாட்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், அசாஞ்சே ஏற்கனவே 1,901 நாட்கள் இங்கிலாந்து சிறையில் இருந்துள்ளார். இதனால், ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அதற்கான தண்டனையை ஏற்கனவே இங்கிலாந்து சிறையில் அனுபவித்ததால் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நீதித்துறை சம்மதம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து சிறையிலிருந்து அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இங்கிலாந்திலிருந்து அசாஞ்சே விமானம்மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நாளை அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார். அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளார். பின்னர், ஏற்கனவே இங்கிலாந்தில் சிறை தண்டனை அனுபவித்ததையடுத்து ஒப்பந்தப்படி அவரை அமெரிக்க கோர்ட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *