
வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் ஈரான் மீது மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் தலைமை அதிகாரி ஸ்காட் பெசன்ட் வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஈரான் மீது இன்னொரு பெரிய இராணுவ நடவடிக்கை தேவைப்படாத வகையில், அந்நாட்டின் மீது வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
ஈரானுக்கு உதவும் எந்தவொரு நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இதையடுத்து பெசன்ட் இவ்வாறு பேட்டியளித்துள்ளார். இது குறித்து விரிவான விவரங்கள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் தடையின்றிச் செல்வதற்கு அமெரிக்காவும், ஈரானும் ஏப்ரல், ஜூன் மாதங்களில் இருமுறை போர் நிறுத்த உடன்பாடுகள் செய்துகொண்டன. இருப்பினும் அடுத்தடுத்த தாக்குதல்களால் அந்த உடன்பாடுகள் உடனடியாக நொறுங்கிப் போயின.



