
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் ஒருமுறை போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான கையோடு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நேரடியாகக் கொல்வோம் என விடுக்கப்பட்ட பகிரங்க மிரட்டல்கள், அமெரிக்கா-ஈரான் மோதலை உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. ஜூலை 9-ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் என்று அமெரிக்கா அறிவித்திருந்தாலும், இந்த மௌனம் அமைதியா அல்லது புயலுக்கு முந்தைய அச்சமா? இன்று ஒட்டுமொத்த உலகமே பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த அரசியல் மற்றும் ராணுவச் சூழலின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.”
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய தலமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில், மீண்டும் ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான சுமுகமான சூழல் தற்காலிகமாக நீடிக்கிறது என்று கருதப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று சர்வதேச கடல் எல்லைக்குள் சரக்கு போக்குவரத்து மேற்கொண்டிருந்த இரண்டு கப்பல்கள், ஈரானின் புரட்சிகர காவல் படையின் இலக்காக மாறியுள்ளன. இந்தத் தாக்குதலில் கப்பல்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், வர்த்தகப் போக்குவரத்திற்குத் தடையாகச் செயல்படும் இத்தகைய வன்முறை, கடல்வழிப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணானதாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள், வளைகுடா நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கத்தார் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், இரு தரப்புக்கும் இடையிலான உறவை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியது. தற்போது மீண்டும் ஒரு மோதல் உருவாக, இரு நாட்டுத் தலைமைகளின் பரஸ்பர அவநம்பிக்கையே முதன்மைக் காரணியாக உள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் கடும்போக்கு அணுகுமுறைக்கும், ஈரானின் தற்காப்புப் படைகளின் செயல்பாடுகளுக்கும் இடையே ஏற்படும் மோதல், இந்தப் பிராந்தியத்தை ஒரு எரிமலைப் பகுதியில் அமர வைத்துள்ளதைப் போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும் , ஈரானின் முன்னாள் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு, இந்தச் சிக்கலான சூழலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 9-ம் தேதி வரை இறுதிச் சடங்குகள் நடைபெறுவதால், பெரும் போர் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அமெரிக்கா ஒருமனதாக முன்வந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலம், பதற்றத்தைத் தணிக்க உதவும் ஒரு சிறிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மௌனத்தை ஒரு அமைதியாகக் கருத முடியுமா அல்லது புயலுக்கு முந்தைய அமைதியா என்ற ஐயம் அரசியல் ஆய்வாளர்களிடையே வலுவாக உள்ளது.
மேலும் , அலி கமேனியின் இறுதிச் சடங்கு நேற்று தெஹ்ரானில் நடைபெற்றது… இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்ல வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளது. அமெரிக்கா ஈரான் போர் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக தாமதமான இந்த இறுதிச் சடங்கில்.. ஈரானின் அரசியல் மற்றும் ராணுவ உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
கமேனியின் உடல் தெஹ்ரானில் இருந்து ஈரானின் பல நகரங்கள் மற்றும் அண்டை நாடான ஈராக் வழியாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இறுதியாக அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரேசா தர்காவில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இப்போது அமெரிக்கா ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் இருந்தாலும் கூட நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதியாகவில்லை. இதனால் இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அதன் பக்கமே திரும்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..



