
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்ப வழக்கில் குற்றவாளிகளில் 38 பேருக்கு மரணத் தண்டனையையும், மேலும் 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் நாள் குஜராத்தின் அகமதாபாத்தில் 70 நிடங்களுக்குள் 21 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர். இருநூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு ஹர்க்கத்துல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கைத் தேசியப் புலனாய்வு முகமை புலனாய்வு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் குற்றவாளிகளில் 38 பேருக்கு மரணத் தண்டனையும், 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்தது.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.அதில் குற்றவாளிகள் அனைவரின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் கூறியபடி குற்றவாளிகள் 38 பேருக்கு மரணத் தண்டனையையும், 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு ஐந்து இலட்ச ரூபாயும், சிறு காயமடைந்தோருக்கு ஒரு இலட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.




