
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலைப் பணியிடை நீக்கம் செய்தது நீதிக்குத் தண்டனை என்று குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, விசாரிக்காமல் வழங்கப்பட்ட தண்டனையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்த செம்மல் அவருக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அவரைப் பணியில் இருந்து நீக்கியிருப்பது அநீதியானது எனக் குறிப்பிட்டுள்ளார்.நீதி வழங்கும் முறையின் அடிப்படையே எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரு தரப்பையும் விசாரித்து நீதி வழங்குவது தான் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீதிபதி செம்மல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் நியாயத்தையும், விளக்கத்தையும் கோரவில்லை என்றும், இது நீதிக்குத் தண்டனையாக அமைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி செம்மல் மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் வழக்கம் போலவே மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகக் கடமை ஆற்றுவதைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



