
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்படுவதாக ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரிக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் ஆகியோர் கையொப்பமிட்டுக் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதி அரிபரந்தாமன், முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் பேசும்போது, இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



