
காரைக்காலில் இந்திய கடலோரக் காவல்படையின் புதிய ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் மத்தியப் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு ‘அக்க்ஷர்’ என்கின்ற ரோந்துக் கப்பலை அர்ப்பணிக்கும் விழா தனியார் துறைமுகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் தீப்தி மோகில் சாவ்லா, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது மத்தியப் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் ‘அக்க்ஷர்’ ரோந்துக் கப்பலின் ரோந்து பணியைத் தொடங்கி வைத்தார்.
51 மீட்டர் நீளம், 320 டன் எடை, இரண்டு 3000 KW டீசல் இன்ஜின்கள் கொண்ட ‘அக்க்ஷர்’ ரோந்துக் கப்பல் 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் CRN-91 துப்பாக்கி மற்றும் இரண்டு ரிமோட் கண்ட்ரோல்ட் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பலில் கமாண்டர் சுபேந்து சக்கரவர்த்தி தலைமையிலான 5 அதிகாரிகளும், 33 படையினரும் பணியாற்ற உள்ளனர்.



