Jharkhand CM Hemant Soren: ஜார்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பு!

முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. 7 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களைக் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார் ஹேமந்த் சோரன்.

இந்நிலையில், 8வது சம்மனுக்கு பதிலளித்த ஹேமந்த் சோரன் ஜனவரி 20-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராவதாவும், தனது அதிகாரபூர்வ இல்லத்தில் வைத்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார். அதன்படி இன்று மதியம் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரியின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு உள்ள நிலைமையின் அடிப்படையில், மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர். இதன்மூலம் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் வீடு உள்ள பகுதி மற்றும் அமலாக்கத்தறை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *