
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது என்கிற நிலையை நோக்கி நம் நாடு முன்னேறிச் செல்வதாகவும், கடந்த பதினோராண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்குப் பணியமர்த்த ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. காணொலி வாயிலாக அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சிலர் எல்லையில் போரிட்டு நாட்டைக் காப்பதாகவும், சிலர் தொழில் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி நாட்டின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவதாகவும் தெரிவித்தார். துறைகள் பலவானாலும் நாட்டுக்குத் தொண்டாற்றுவதுதான் அவர்களின் ஒரே நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
நமது பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஒன்றேகால் இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும், இதற்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தனியார் துறையில் வேலை பெறும் ஒருவருக்கு முதல் மாத ஊதியத்துடன் 15ஆயிரம் ரூபாயை அரசு பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.



