
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அந்நாடு தற்போது இருக்கும் சூழலில் பதிலடி எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்தச் செய்தி விவரிக்கிறது. இந்தியா நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் ஆசாத்தின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் உள்ள பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகப் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இது இந்தியாவுக்கான பதிலடி எச்சரிக்கையாகும்.
அப்படிப் பதில் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் முதலில் கையில் எடுக்கும் உத்தி டிப்ளமேட்டிக் நடவடிக்கையாகத்தான் இருக்கும். அதாவது இந்தியா அத்துமீறிவிட்டது என்று ஐநா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் முறையிடும். இப்படிச் செய்வதன் மூலம் இஸ்லாமிய நாடுகளை வைத்து இந்தியாவைக் கண்டிக்க முயலும். ஐநா மூலம் சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்த முயலும்.
பாகிஸ்தானின் இரண்டாவது விருப்பத் தேர்வு, எல்லையைத் தாண்டித் தாக்குதல் நடத்துவது. 2019ஆம் ஆண்டில் இது நடந்தது. இந்தியா பாலக்கோட் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கப் பாகிஸ்தான் விமானப்படை ‘ஆபரேஷன் ஸ்விப்ட் ரிடோர்ட்’ எனும் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. அந்நாட்டு விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அதுபோன்று இந்த முறையும், எல்லை தாண்டிய ஊடுருவல் நடக்கலாம்.
அந்நாட்டு ராணுவம் ‘Full-spectrum deterrence’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அதாவது, சிறிய/பெரிய என எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதற்குப் பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்பதே இதன் பொருள். வேறு வடிவில் சொல்வதெனில், முழு அளவிலான தடுப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, ராணுவம் பதிலடிக்காகக் காத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்.
பாகிஸ்தானின் மூன்றாவது ஆப்ஷன், அணு ஆயுதத்தைக் கையில் எடுக்கலாம். இது கொஞ்சம் ஓவரான ரியாக்சன்தான். இருப்பினும் இதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்போது, எதிரிகள் திருப்பித் தாக்க முடியாதபடி அடி இருக்க வேண்டும். அந்த அளவுக்குப் பாகிஸ்தான் திறன் வாய்ந்ததா? இந்தியாவை ஒரே அடியில் முடக்கிவிட முடியுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி.
சைபர் தாக்குதல் நான்காவது ஆப்ஷனாக இருக்கிறது. இது வழக்கமாக இருப்பதுதான். இந்திய பெண்கள் மற்றும் அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் பற்றிப் பாகிஸ்தான் நெட்டிசன்கள் அவதூறு பரப்பி வந்தனர். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் பெண்களின் தலைமையில் நடைபெற்றதையடுத்து இந்த சைபர் புல்லிங் ஓரளவு குறைந்தது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் ஆதரவின் பேரில், இந்திய அரசைக் குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
கடைசி ஆப்ஷன் நேரடித் தாக்குதல். எல்லையில் நேரடித் தாக்குதலைப் பாகிஸ்தான் ராணுவம் நடத்தலாம். அந்நாட்டின் முப்படைகள் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில் இந்தத் தாக்குதலை நடத்தப் பாகிஸ்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும். அதாவது அந்நாட்டுக்கு இப்போது 13 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலர் அளவுக்குக் கடன் இருக்கிறது. அதேபோல, அந்நியச் செலாவணிக் கையிருப்பு வெறும் ஆயிரம் கோடி டாலருக்கும் கீழே இருக்கிறது. இதை வைத்து வெறும் 2 மாதங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமே அந்நாடு இறக்குமதி செய்ய முடியும். பணவீக்கம் 38 விழுக்காடாகவும், தொழில்துறைச் சுருக்கம் 10 விழுக்காடாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில் போர் எப்படிச் சாத்தியமாகும்.
